கோவை: இலங்கையில் தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா(35). இவர் கோவை பீளமேடு சேரன்மாநகரில் ரகசியமாக தங்கியிருந்த போது கடந்த 2020ம் ஆண்டு ஜுலை 3ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். உடன் தங்கியிருந்த அவரது காதலி உட்பட சிலர் கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் இறந்தது அங்கொடா லொக்காதானா? என்பதை உறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அவர் வேறு எங்கேனும் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உயிரிழந்தது யார் என்பதை உறுதிப்படுத்த சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டினர். தொடர்ந்து இலங்கையில் உள்ள அங்கொடா லொக்காவின் தாய் சந்திரிகா பெராராவின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அவற்றை அந்நாட்டு தூதரகம் மூலம் சென்னையில் உள்ள தடயவியல் துறை ஆய்வகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து இருவரின் ரத்த மாதிரிகளும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கோவையில் உயிரிழந்தது அங்கொடா லொக்காதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது.